Monday 9 December 2013

அறிமுகம் 

தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம் 1981 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் சண்முகநாத சர்மா உமாகாந்தன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பொதுவாக வானொலி ஒலிபரப்புகளையும் சிறப்பாக தமிழ் வானொலி ஒலிபரப்புகளையும் மக்கள் மத்தியில் பரவச் செய்யும் நோக்கத்துடன் இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு 

1950களில் இருந்தே வானொலி ஒலிபரப்புகளைக் கேட்பதில் ஆர்வம் கொண்டிருந்த உமாகாந்தன், 1976 முதல் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து ஒலிபரப்பான வேரித்தாஸ் வானொலியின் தமிழ்ப்பணி நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு கடிதங்கள் எழுதியும், நிகழ்ச்சிக்கு ஆக்கங்கள் அனுப்பியும் வந்தார். அதன் காரணமாக, தமிழ்ப்பணி ஒலிபரப்புக்கு பொறுப்பாளராக இருந்த திரு. எம். ஏ. சுவாமி (மடலைமுத்து ஆரோக்கியசாமி) அவர்கள் தமிழ்ப்பணி ஒலிபரப்பை மக்கள் மத்தியில் பரவச்செய்யுமாறு உமாகாந்தனை கேட்டுக்கொண்டார். 
உமாகாந்தன் மன்றம் அமைக்க தீர்மானித்து திரு. சுவாமி அவர்களின் ஆதரவை கேட்டார். அவரும் சம்மதித்து ஆயத்த கூட்டம் பற்றி தமிழ்ப்பணி நிகழ்ச்சியில் அறிவிப்பு செய்தார். 

மன்றத்தின் அங்குரார்ப்பண கூட்டம் 1981 நவம்பர் 14 சனிக்கிழமை யாழ் காங்கேசன்துறை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. மன்றத்தின் அமைப்புச் செயலாளராக உமாகாந்தனும், தலைவராக திருமதி அமிர்தா மகிந்தாவும், துணைத் தலைவர்களாக திரு ஏ. என். யோகநாதன் மற்றும் அருட்சகோதரி லில்லி ரீட்டா ஆகியோரும், பொருளாளராக திரு. ஜெயராமனும், துணைப் பொருளாளராக டாக்டர் பட்ரிக் அந்தோனிபிள்ளையும் தெரிவு செய்யப்பட்டனர். பத்து உறுப்பினர் கொண்ட செயற்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

செயற்பாடுகள்

மாதமொரு தடவை நிர்வாக குழு கூடுவது எனவும் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களால் இயன்ற அளவு மேலும் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இக் கூட்ட விபரங்களை உமாகாந்தன் வெரித்தாஸ் தமிழ்ப்பணிக்கு அனுப்ப, திரு எம்.ஏ. சுவாமி அதை ஒலிபரப்பினார்*. அந்த அறிவிப்பைக்கேட்டு மேலும் பலர் தாங்களாகவே உறுப்பினராக சேர்ந்தனர். இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், தமிழ் நாட்டிலிருந்தும் பலர் கடிதங்கள் எழுதி தங்களை மன்றத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டனர்.

இவ்வாறு சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சங்கள் செய்யவும், உலகின் பல்வேறு வானொலி ஒலிபரப்புகளை அறிமுகம் செய்யவும், உறுப்பினர்களின் எழுத்துத் திறமையை வளர்க்க அவர்களுக்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கவும், நேயர்களுக்கும் வானொலி ஒலிபரப்புகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயற்படவும் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப் பட்டது. 

நிதி நிலையை கருத்தில் கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை சஞ்சிகையாக வெளியிடுவதெனவும் இடையில் உறுப்பினர்களுக்கு அவசிய தகவல் தெரிவிக்க வேண்டி வந்தால் செய்திக் கடிதமாக அனுப்புவதென்றும் தீர்மானிக்கப் பட்டது.

தமிழ் ஒலி சஞ்சிகை பற்றிய கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் வெளியிடப் பட்டுள்ளது. அதனைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

கருத்தரங்குகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள மன்ற உறுப்பினர்கள் நேரில் பங்குபெறும் கருத்தரங்கு ஒவ்வொரு மாதமும் நடாத்தப் பட்டது. சில சமயங்களில் வானொலி ஒலிபரப்புடன் தொடர்புடைய பிரமுகர்களை அழைத்து, அவர்கள் துறை சார்ந்த விடயங்களில் கருத்துரை ஆற்றுவது இந்த கருத்தரங்குகளில் சிறப்பு அம்சமாக இடம் பெற்றது. பிரமுகர்களின் கருத்துரை முடிந்தபின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கும் கலந்துரையாடல் நடைபெறும். இவற்றின் மூலம் உறுப்பினர்களின் வானொலி தொடர்பான அறிவும் வானொலிக்கு ஆக்கங்கள் படைக்கும் திறனும் வளர்ச்சியடைந்தன.

இக்கருத்தரங்குகளில் நேரில் பங்குபற்ற முடியாத ஏனைய உறுப்பினர்களுக்கு கருத்தரங்குகளில் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரம் தமிழ் ஒலி சஞ்சிகை மூலம் அல்லது செய்திக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப் பட்டது.

வானொலி நிலையங்கள் ஒத்துழைப்பு

தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றத்துக்கு வெரித்தாஸ் தமிழ்ப்பணி, பிபிசி தமிழோசை ஒலிபரப்புகள் நேரடியாக ஆதரவு தந்தன. தமிழ் ஒலி சஞ்சிகை வெளியானதும் அது பற்றி அவர்கள் ஒலிபரப்பில் அறிவித்தார்கள்.
அக்காலத்தில் பிபிசி தமிழோசைக்கு சங்கர் அண்ணா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட திரு ஷங்கர் அவர்கள் பொறுப்பாக இருந்தார். தமிழ் ஒலி முதலாவது இதழில்
காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான்
காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
என்ற பாரதி பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன. சங்கர் அண்ணா அது பற்றி குறிப்பிட்டு அதனை மேலும் விளக்குவது போல,
அதாவது இங்கே லண்டனில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் இந்தியா, இலங்கை மற்றும் நாடுகளில் இருந்து வானொலி மூலம் கேட்கிறீர்கள். அந்த வானொலி கருவி செய்வோம் என்று பாரதி பாடினான். வானொலிக் கருவி இருந்தால் மட்டும் போதாது, அதில் எங்கே, எப்போ, என்னென்ன நிகழ்ச்சிகள் கேட்கலாம் என்பது தெரியவும் வேண்டும். அந்தப் பணியைத்தான் தமிழ் ஒலி மன்றத்தார் செய்யப் போகிறார்கள்
என்றும் கூறினார்.

இலங்கை வானொலி, மன்ற உறுப்பினர்களின் ஆக்கங்களை ஒலிபரப்பி ஊக்குவித்தது. தமிழ் ஒலி வானொலி நேயர் மன்றம் பற்றியும் சஞ்சிகை பற்றியும் கலைக்கோலம் நிகழ்ச்சியில் விமர்சனம் ஒலிபரப்பானது.

தமிழ் ஒலி மன்ற யாழ் மாவட்ட உறுப்பினர்கள் தயாரித்து இலங்கை வானொலி தமிழ் சேவையில் ஒலிபரப்பான இளஞ்சுடர் நிகழ்ச்சியை கேட்டுப் பாருங்கள்.



  • வெரித்தாஸ் வானொலியில் ஒலிபரப்பான அறிவிப்பை கேட்பதற்கு இங்கே சொடுக்கவும்
  • இலங்கை வானொலி தமிழ்ச் சேவை "கலைக்கோலம்" நிகழ்ச்சியில் தமிழ் ஒலி மன்றம் பற்றியும் சஞ்சிகை பற்றியும் லெ. முருகபூபதி சொல்வதைக் கேட்க இங்கே சொடுக்கவும்